×

மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் ஆட்டோ, வீட்டு ஜன்னலை நொறுக்கிய 6 பேர் கைது

திருவொற்றியூர்: மாதவரம் பால்பண்ணை, காவல்நிலையத்திற்கு உட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் 28ம் தேதி நள்ளிரவு ஒரு மர்ம கும்பல் அரிவாளால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 15க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் கண்ணாடிகளையும், 5 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இது சம்பந்தமாக மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில், பெரிய மாத்தூரை சேர்ந்த வாலிபர்கள் சிலருக்குள் தகராறு ஏற்பட்டதும், இதில் பழிவாங்க அரிவாளுடன் எதிரியை தேடி எம்எம்டிஏ பகுதிக்கு வந்த அவர்கள், சம்பந்தப்பட்ட நபர் சிக்காததால் ஆத்திரமடைந்து, ஆட்டோ மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (25), அஜித் குமார் (24), ஸ்டீபன் லாரன்ஸ் (26), பிரசாந்த் (23), திருமால் (27), ராகுல் (25) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் ஆட்டோ, வீட்டு ஜன்னலை நொறுக்கிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mathur MMDA ,Tiruvottiyur ,Madhavaram ,Dinakaran ,
× RELATED மாத்தூர் எம்எம்டிஏ.வில் நள்ளிரவு 15...